இயற்கை

சுட்டெறிக்கும் செங்கதிரோன்
இருளகற்றி ஒளியெழுப்ப
அவனுடைய அடிமைகளாய்
சேவல்களும் கொக்கரிக்க

சில்லென்ற நீர்ப்பரப்பில்
நிற்கின்ற தாமரையும்
சுள்ளென்று வெயில் பட்டு
முகம் மலர்ந்து சிரித்து நிற்க

மறுநிமிடம் பறவையெல்லாம்
இறைதேடி பறக்கையிலே
அவை எழுப்பும் ஒலியலைகள்
இப்பூவுலகை அதிரவைக்க

ஓடையிலே நீரலையும்
ஜலதரங்கம் இசைத்திருக்க
தென்றல் மெல்ல தீண்ட அதில்
மரக்கிளைகள் மகிழ்ந்திருக்க

மெல்ல மெல்ல சூரியனும்
நடுவானம் வந்து நிற்க
இவற்றையெல்லாம் பார்த்து நானும்
மனம் மகிழ்ந்து நின்றிருக்க

கணப் பொழுதில் சூழ்நிலையில்
வந்த ஒரு மாற்றமிது

நீல வர்ண வான மங்கை
கருமை நிற ஆடை கட்ட
பச்சை வர்ண மேடையிலே
நின்ற குயில் கவிதை பாட

பூமியிலே வீழ்ந்து அந்த
மழைத்துளிகள் ஜதிகள் போட
தவளை எல்லாம் தம் குரலில்
பக்க நாதம் சேர்ந்து போட

அங்கு வந்த வண்ண மயில்
நடனமொன்றை ஆடிகாட்ட
இடையிடையே இடியினோசை
மிருதங்கம் வாசித்திருக்க

வானில் வந்த மின்னல் வண்ண
விளக்கொளியை உமிழ்ந்து செல்ல
பார்த்த கண்களிரண்டும் இந்த
காட்சியிலே நின்று போக

தானாக கைகள் கூடி கவிதை
ஒன்றை எழுதுதம்மா!

Comments

Popular posts from this blog

பாரதியார்

குழந்தையும் தெய்வமும்

என் மனைவிக்கு